#மார்கழி_மாதம்_வந்தாச்சு!
மார்கழி ஆரம்பிக்கப் போவதை நினைக்கும்போதே உடலும், மனமும் சிலுசிலுக்கிறது. மார்கழி மாதப் பனியும், குளிரும், விடிகாலையில் கண் விழிக்கும்போதே எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களும் , எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும் மாரியம்மா, காளியம்மா பாடல்களும், காலையில் எழுந்து பக்கத்து வீட்டை விடப் பெரியதாகப் போடும் கோலமும் , அதை அன்று முழுதும் நின்று ரசிப்பதும் இன்றைய இளம் பெண்களும், குழந்தைகளும் அறியாத, அனுபவிக்காத ஒன்று.
மார்கழி பிறப்பதை நினைக்கும்போதே அந்த நாட்களின் ஞாபகம் வந்து நெஞ்சில் இனிக்கிறது. இன்று நாம் வாழும் ஃ பிளாட்டுகளில் வாசலும் இல்லை: கோலமும் இல்லை: அதை ரசிப்பவரும் இல்லை!
என் சின்ன வயதில் நான்கு
மணிக்கெல்லாம் என் அம்மா ‘எழுந்திரு. மார்கழி மாதம் விடிகாலையில் எழ வேண்டும். வாசல் எல்லாம் தெளித்தாச்சு. கோலம் போடு’ என்பார். இதமான மார்கழிக் குளிரில் கண்கள் இன்னும் தூங்க விரும்பினாலும் கோல ஆசை தூக்கத்தை விரட்டி விடும்.
கோலத்தை போட்டு முடித்து குளித்து, பக்கத்திலிருந்த கோவிலுக்கு சென்று பஜனையில் பாடிவிட்டு, சுடச்சுட பொங்கலைப் பெற்றுக்கொண்டு வந்து வீட்டில் அதை ருசித்து சாப்பிடும் அனுபவம் ….இன்றும் மனம் அந்த நாளுக்காக ஏங்குகிறது! அறியாத வயதில் அன்று செய்த அந்தப் புண்ணியம்தான் இன்று அன்பான கணவரையும், அருமையான குழந்தைகளையும் கிடைக்கச் செய்தது போலும்!
எட்டு வயது முதல் எந்தக் கோலம் பார்த்தாலும் அதை அப்படியே மனதில் வைத்து மறுநாள் வாசலில் போடுவேன். விதவிதமாகக் கோலம் போடும் என் அம்மாவிடம் இருந்த அச்சு மாதிரி சிறிதும் வளையாமல், கோணல் இல்லாமல் புள்ளி வைக்கும் திறமையும், அளவெடுத்தாற்போல் கோலம் போடும் அழகும் என்னிடம் கொஞ்சம் குறைவுதான்.
ஆனாலும் புள்ளிக்கோலம், வளைவுக் கோலம், நேர்கோட்டுக் கோலம், ரங்கோலி என்று எனக்குத் தெரிந்த கோலங்களைப் போட்ட நோட்டுகள் ஏழெட்டு இன்னமும் என்னிடம் உள்ளன. அத்துடன் வகைவகையாய் கோலப் புத்தகங்கள். இப்பொழுது கையில் மொபைலில் பார்த்தே கோலம் போடும் வசதி!
திருமணம் ஆனதுமே உத்திரபிரதேசத்திற்கு மாற்றலாகி விட்டதால் அங்கு கோலம் போட வாய்ப்பில்லை. என் முதல் பிரசவத்திற்கு என் அம்மா வீட்டிற்கு நாகர்கோவிலுக்கு வந்தபோது, மார்கழி மாதம் என் மகன் பிறந்த அன்றுவரை வாசல் நிறைத்து கோலம் போட்டி
ருந்தேன்.
திரும்ப தமிழ்நாட்டிற்கு மாற்றிவந்தபோது அதிர்ஷ்ட வசமாக நாங்கள் குடியிருந்த வீட்டு வாசல்கள் கோலம் போட ஏற்றதாக இருந்ததால், நானும், என் மகளும் சேர்ந்து அமர்க்களமாகக் கோலம் போடுவோம். என் கணவருக்கு, பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்த கோலங்கள் கூட உண்டு! தினமும் போட வேண்டிய கோலங்களை என் பிள்ளைகள்தான் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார்கள்!
தினமலர் பத்திரிகையின் கோலப்போட்டி மற்றும் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளேன்! பல வார, மாத இதழ்களில் என் கோலம் பிரசுரமாகி உள்ளது.
இன்றும் எங்கள் ஃபிளாட்டில் மார்கழி முழுவதும் விதவிதமாய்க் கோலம் போடுவேன்! அக்கால புள்ளி, நேர்க் கோட்டுக் கோலங்களிலிருந்து மாறி சில ஆண்டுகளாக வித்யாசமான வண்ணக் கோலங்கள் என் கைவண்ணம்! சென்ற ஆண்டு ஒவ்வொரு நாளும் மார்கழியின் நாயகன் என் மனம் கவர் மாதவனின் ரூபங்களைக் கோலமாக வரைந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம்.
கோலம் போடுவது ஒரு கலை மட்டும் அல்ல. நம் உடலுக்கும், .கைகளுக்கும், இடுப்புக்கும், கண்ணுக்கும், மூளைக்கும் சிறந்த உடற்பயிற்சியும் கூட. மார்கழி மாத விடிகாலைகளில் காற்றில் ஓசோன் நிறைந்திருப்பதை அந்நாளிலேயே அறிந்த நம் முன்னோர் இப்படி கோலம், பஜனை, கோவிலுக்கு செல்வது என்ற பழக்கங்களை உண்டாக்கியுள்ளனர். கோலம் என்பதற்கு அழகு என்று பொருள். கற்பனை வளத்தை அதிகரிக்க கோலம் போடுவது உதவும்.
கோலம் உருவானதற்கான சில சான்றுகளைப் பார்ப்போம். வேத காலத்தில் அங்குரார்ப்
பணத்தின்போது முளைப்பாலிகை பால், பால்குடம் , விளக்கு இவற்றை வைக்க தனித்தனி கட்டங்கள் வரைந்து அரிசிமாவு, மஞ்சள்பொடி நிரப்புவர்.
அதுவேகாலப் போக்கில் கட்டக் கோலங்களாகி விட்டன. அக்கினி வளர்க்க ஒன்பது குழிகள்
தோண்டிக் குண்டம்
அமைப்பர்.அவற்றை இணைக்க கோடு இட்டதே புள்ளிக் கோலமானது. தமிழ் மக்கள் பழங்காலத்தில் மணல் ஓவியம் வரைந்ததாக பழைய நூல்களில் காணப்படுகிறது.
வெண்மையும், சிவப்பும் இணைந்த கோலம் சிவா-சக்தி ஐக்கியமாகக் கூறப்படுகிறது.
வடநாடுகளில் போடப்படும் ரங்கோலி பற்றிய சுவையான கதை இது. ஹோலி என்ற முனிவரின் மனைவி அவள் கணவர் இறந்ததால் அவர் உருவத்தை பல வண்ணப் பொடிகளால் வரைந்து அதன் மீது 48 நாட்கள் படுத்து தன் உயிரை விடுகிறாள்.அவள் நினைவாக பல வண்ணங்களில் போட்ட கோலம் ரங்கோலி ஆயிற்று.
கடவுளுக்கு முன்பாக தினமும் கோலமிடுதல் வேண்டும். நவக்கிரக கோலங்கள் போட்டால் அவற்றினால் வரும் தீங்குகள் விலகும். ஸ்ரீசக்ரம், ஹிருதய கமலம் கோலங்களை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் போடுவதால் செல்வம் கிட்டும். சங்கு, சக்கரக் கோலங்களை சனிக்கிழமைகளில் போடுவது நல்லது. வீடு வளம் பெறும்.
வாசலில் சூர்யோதயத்திற்கு முன்பு கோலமிடல் வேண்டும். இழையை இடப்புறமாக இழுக்கக் கூடாது.கோலத்தைக் காலால் அழிக்கக் கூடாது. வாயிற் படிகளில் குறுக்குக் கோடுகள் போடக் கூடாது. நேர்கோடுகளே போட வேண்டும். இரட்டை இழைக் கோலமே போட வேண்டும்.
விசேஷ நாட்களில் அரிசியை அரைத்த மாவினால் இழைக் கோலம் போடுவது நல்லது. கண்டிப்பாக சுற்றிலும் காவியிடுவதும் அவசியம். குழந்தை பிறந்தாலும், பெண்கள் பருவம் அடைந்தாலும் அந்த மகிழ்ச்சியை தெரிவிக்க இரவானாலும் கோலமிட வேண்டும். அமாவாசை
மற்றும் முன்னோர் காரியங்கள் செய்யும் தினங்களில் மட்டுமே வாசலில் கோலம் போடக் கூடாது.
கிராமங்களில் இன்றும் மார்கழியில் பிரம்மாண்ட கோலங்கள் வண்ணத்துடன் நடுவில் பரங்கிப்பூவும் விளக்குகளும் அணி செய்ய மிக அழகாகப் போடப்படுகின்றன. நகரங்களிலோ இன்று ஸ்டிக்கர் கோலங்களே பல வீடுகளுக்கு முன் காட்சி அளிக்கின்றன.
தினமும் கோலம் போட முடியாவிடினும் விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களிலாவது அழகிய கோலங்களை இட்டு கோலக்கலை அழியாமல் காப்பாற்ற முயற்சிப்போம்.